Sunday, October 26, 2025

உவந்தனம் பெரிதே!

 


சென்ற திங்கள் என் பிறந்தநாளுக்கு ஜார்ஜ் ஜோசப் பரிசு ஒன்று கொடுத்தார்: “நீங்க விரும்பிப் படிப்பீங்கன்னு தோனுச்சு சார், இந்த நூல் வாங்கிட்டு வந்தேன்.” அவர் கொடுத்தது கரிகாலன் எழுதிய “நோம் என் நெஞ்சே”. ‘சங்க காலப் பெண்பாற் புலவர்கள் வாழ்வும் எழுத்தும்’ என்பது இந்நூலின் பொருண்மை. சங்க காலப் பெண்பாற் புலவர்கள் இயற்றிய பாடல்களை எல்லாம் திரட்டியெடுத்து ”சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் மூலமும் உரையும்” என்னும் தலைப்பில் ந.முருகேச பாண்டியன் ஒரு நூல் தந்திருக்கிறார்.  சங்கக் கவிதைகளை நம் வாழ்வில் காணும் அன்றாட நிகழ்வுகளோடு இயைத்துக் காணும் உத்தியுடன் ஜெயமோகன் “சங்கச் சித்திரங்கள்” எழுதினார். கரிகாலன் எழுதிய நூல் இவ்விரண்டுக்கும் இடை நிலையில் அமைகிறது. சுவைஞனாகவும் அறிஞனாகவும் ஒருங்கிருந்து அணுகி பெண்பாற் புலவோரின் சங்கப் பாடல்களை, நாற்பத்திரண்டு கட்டுரைகளாக நாம் புலனுண்ண அளித்திருக்கிறார்.

            பதினைந்து நாட்களுக்கு முன் இந்த நூலினை வாசிக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது கையில் எடுப்பதும் இரண்டு மூன்று கட்டுரைகளை வாசித்துவிட்டு வைத்துவிடுவதுமாகப் போய்க் கொண்டிருந்தது. பத்து நாட்களுக்கு முன் பாதி வாசித்து வைத்ததோடு மறந்தே போனேன். வேறு அலுவல்கள் நேரத்தைப் பிடித்துக் கொண்டன. முந்தாநாள் காலையில், ஓய்வாக முகநூலில் மூழ்கியிருந்தேன். ப்ரூனோ மார்ஸ் என்னும் மேற்கத்திய நவீன இசைக் கூத்தனின் ஃபினஸ்ஸ் (Finesse) என்னும் பாடலின் இடையிசை (interlude)-இல் அவன் தன் குழுவுடன் ஆடும் நடன அசைவுகள் எப்படி ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்திற்று என்பதை ரீல்ஸ் ஒன்று காட்டிற்று. தொடர்ந்து. ப்ரூனோ மார்ஸின் நடன மற்றும் இசைத் தத்துவம் பற்றிய காணொலி ஒன்றையும் பார்த்து முடித்தேன். வியப்பாக இருந்தது.


            
கைப்பேசியை அணைத்து வைத்துவிட்டு சும்மா அமர்ந்திருந்தபோது, பத்து நாட்களுக்கு முன் பாதியில் கை மறந்து வைத்த ‘நோம் என் நெஞ்சே’ நூல் நினைவுவர அதன் வாசிப்பைத் தொடரலாம் என்று எடுத்தேன். பதினைந்தாம் கட்டுரையுடன் நிறுத்தியிருந்ததால் பதினாறாம் கட்டுரையை விரித்தேன். “காலம் தோறும் வளரும் காதல் கதைகள்!” என்பது தலைப்பு. ஆட்டனத்தி ஆதிமந்தி இணையரின் காதல் குறித்து இதில் பேச ஆரம்பித்தார். பின்வரும் வரிகளை வாசித்தபோது இன்பச் சிலிர்ப்பு:

“ஆட்டனத்தி அழகும் வீரமும் ஆடற்கலையும் இணைந்த இளைஞன். இவனை சேர இளவரசனாகவும் சிலர் கூறுவதுண்டு. நீச்சலையும் நடனத்தையும் இணைத்ததோரு நடன அழகியலில் இவன் விற்பன்னன்”(ப.62). நான் உடனே ப்ரூனோ மார்ஸை ஆட்டனத்தியாகக் கண்டேன். அல்லது, கால் இடத் தொலைவுகளைக் கடந்து என் கற்பனையில் ஆட்டனத்தியும் ப்ரூனோ மார்ஸும் அத்விதம் ஆகிவிட்டனர். என் சிலிர்ப்பை வாட்ஸாப் வழியில் கரிகாலனுக்கும் ஜார்ஜ் ஜோசப்புக்கும் அனுப்பினேன். கரிகாலன் இதயப் படம் போட்டார். ஜார்ஜ் ஜோசப், “நீச்சல் நடனம் இதுபோல்தான் இருந்திருக்குமோ?” என்று சொல்லி ஒரு தம்ஸப் போட்டார்.

கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து வாசித்தேன். வெளியே கார்காலப் பெரும்பொழுதின் சூழல் வேறு. எம்குடிச் சிறுமகள் உருளைக் கிழங்கும் பாற்களிம்பும் கொண்டு சுடச்சுட அருஞ்சுவை அடிசில் ஒன்று உண்ணத் தந்தாள். அத்துடன் தலைப்பேசியில் நல்லிசையும் சேர்ந்துகொண்டது. பண்ணும் பட்சணமும் பைந்தமிழ்ப் பனுவலும் ஒருங்கே பெற்றேம் யாம்!

இன்று, ’நோம் என் நெஞ்சே’ நூலை அரை மணி நேரத்திற்கு முன் வாசித்து முடித்தேன். நல்ல தமிழை ருசிக்கவும் சங்கத் தமிழரின் வாழ்வியலை அறியவும் விழைவோர் இந்நூலை வாசிக்கலாம். பண்டைத் தமிழரின் பண்பாடு பற்றி ஆழ்ந்து சிந்திப்போருக்கு இந்நூலில் ஆங்காங்கே சிந்தனைக் களங்கள் தென்படும். இந்நூல் நெடுகிலும் கரிகாலன் பல புதிய பார்வைகளை முன்வைத்து நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார். ஈங்கிவண் கூறுவல் சிறிதே!

சங்க காலம் என்பது தமிழர் வரலாற்றில் ஒரு  transition period ஆகும். அது, சாதியற்ற தமிழர் சாதியத் தமிழாக மாற்றம் அடைந்த காலக் கட்டம் என்று பக்தவத்சல பாரதி அவதானிக்கிறார். மேலும், கற்கருவிகளைக் கையாண்ட போது பூசல்களும் சண்டைகளும் நிகழ்ந்த நிலை மாறி இரும்புக் கருவிகளைக் கையாளத் தொடங்கியதும் போர்கள் பெருகிய காலக் கட்டம் என்று இதனைக் கரிகாலன் அவதானிக்கிறார். தமிழினத்தார் தம்முள்ளே சண்டைகளும் சமர்களும் நிகழ்த்தினர் என்பதைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. எற்றுக்கு? கரிகாலன் தயங்காமல் உண்மை மொழிகிறார்: “உற்பத்திக் கருவிகளான மனிதனை அடிமையாக்கவும், நிலங்களை அபகரித்து செல்வங்களைக் கொள்ளையிடவும், எல்லைகளை விரிக்கவும் தமிழ் மண்ணில் போர்கள் நிகழத் தொடங்கின. வீரம் ஒரு பண்பாடாக மாறியது. உடையோரைச் சார்ந்த புலவர்கள் போர்த்தொழிலைப் பாடினார்கள்” (ப.112).

இதே போல், “உடைமைச் சமூகம், ஆநிரை சமூகத்திலிருந்து உருப்பெறுகிறது” (ப.123) என்றும், “விருந்து என்கிற நாகரீகம் தோன்றுவதற்கு முன்புவரை இனக்குழு சமூகத்தில் அகமணமுறையே இருந்தது. விருந்து பண்பாடு வளர்ந்த பிறகே புறமணமுறை வளர்கிறது” (ப.123) என்றும், “ஆதி நிலவுடைமை மதிப்பீட்டால் ஆனதே சங்கக் கவிதைகள்” (ப.29) என்றும், ‘அவ்வையை வயதானவளாகக் காட்டுவதில் ஆணாதிக்க மனநிலையும் இருந்தது. கள்ளுண்ட அதியன் காலத்து அவ்வை(யைத்) தமிழ் மனங்களிலிருந்து மறைத்து புனிதப்படுத்தும் முயற்சி!” (ப.96) என்றும் அவர் தரும் அவதானிப்புகள் எல்லாம் ஆழ்ந்த வரலாற்றுப் பார்வை கொண்டுள்ளன.

சங்க காலத்தில் பாணர்களும் புலவர்களும் இருந்துள்ளனர். ஒருவரே இரண்டுமான இருந்ததும் உண்டு. “குறுநிலப் பரப்புகளாக இருந்த திணை நிலங்களை பாடிய பாணர் மரபு மெல்ல பெருநிலங்களைப் பாடிய புலவர் மரபாக உருமாறுகிறது” (ப.19) என்று கூறி, “பாணர்கள் அலைகுடிகள். புலவரோ நிலைக்குடிகள். புலவர்களே போர், வீரம், அரசு அதிகாரம் போன்ற மதிப்பீடுகளை உருவாக்கி திணை வாழ்வை மாற்றியதில் செல்வாக்கு மிகுந்தவர்கள். மொழி எவ்வாறு அதிகாரமாகிறது என்பதை ஆராயும் அமைப்பியலை வாசித்தவர்கள் இப்பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்” (பக்.19-20) என்று கரிகாலன் சிந்திக்கத் தூண்டுகிறார்.

சங்ககாலத்தில் பரத்தமை ஒழுக்கம் என்று ஒன்று வகுக்கப்பட்டிருந்தது. தொல்காப்பியம் அதற்கான இலக்கணத்தைச் சொல்கிறது. திருமணம் செய்த மனைவியே அன்றி இல்லற வரையறைக்கு அப்பால் ஓர் ஆண்மகன் பலவகையான பெண்களுடன் உறவு கொண்டிருந்தான். அவர்கள் காமக் கிழத்தியர் என்றும் பரத்தையர் என்றும் வகைப்பட்டனர். இவர்களிலும் பல வகைப்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. இத்தகைய சூழ்நிலை இருந்தால் மணமுறிவு (divorce) நிகழ்ந்திருக்க வேண்டுமே? அப்படி நிகழ்ந்ததற்கான குறிப்பேதும் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால், ஊடல் மட்டும் இருந்திருக்கிறது. அது குறித்துக் கரிகாலன் ஆய்ந்து சொல்கிறார்: “பெண்களுக்கிடையே ஏற்றத் தாழ்வின் காரணமாக சமநிலையின்மையை ஆணாதிக்க மதிப்பீடு உருவாக்கியிருந்தது. அது ஆணின் இருப்பை சிறிதும் அசைக்காமல் பார்த்துக் கொண்டது” (ப.107).

கரிகாலன் என்னும் ஆய்வறிஞர் அவ்வப்போது, நக்கீரனுக்கே நெற்றிக்கண் கிடைத்துவிட்டது போன்றும் தோன்றுகிறார். அந்த நெருப்புப் பார்வைக்கு வள்ளுவரும் தப்பவில்லை: “திருவள்ளுவர் மீது கோபம் கொள்ளும் இடங்களும் இருக்கவே செய்கின்றன. வரைவின் மகளிர் அதிகாரத்தின் பத்து குறட்பாக்களும் வள்ளுவனை பிற்போக்காளனாகக் காட்டுபவை!” (ப.105). இன்னோர் இடத்தில் 1115-ஆம் திருக்குறளை மேற்கோள் காட்டி கரிகாலன் சொல்கிறார்: ”காம்பு களையாத அனிச்சம் மலரை சூடினால் பெண் இடை தாங்காது! வள்ளுவர் வருத்தப்படுகிறார். அழகின் வழி பெண் உடலை பலவீனமாக்கிய ஆண் தந்திரமே இது” (ப.109).

பரத்தையர் குறித்துப் பேசுமிடத்தில் அந்த நெற்றிக்கண் தொல்காப்பியரையும் சுடுகிறது: “புராதன சமூகம் உதிர்ந்து உருவாகிய் உடைமைச் சமூகத்தில் ஆணுக்கு இரண்டு கிழத்திகள் தேவைப்பட்டனர். வாரிசைப் பெற்றுக் கொடுக்க இல்லக்கிழத்தியும், விதம் விதமாக இன்பத்தை அள்ளிக் கொடுக்க காமக்கிழத்திகளும் தேவைப்பட்டனர். இதைதான் ‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’ என்றார் தொல்காப்பியர். இதுதான் ஆணுக்கான பெருமை, வீரம் எல்லாம்!” (ப.105).

வெறுமனே செய்திகளை அடுக்கிச் சொல்லிக் கொண்டு போகும் நூலாக இல்லாமல் கரிகாலன் தானே ஒரு கவிஞர் என்பதால் அற்புதமான உவமைகளும் உருவகங்களும் கொண்டு கருத்துக்களைத் தீட்டியிருக்கிறார். அதற்கு ஒரு சான்று: “காதல், நடுக்குளத்தில் பூத்திருக்கும் மலர். சிலர் பறித்து கரை சேர்கிறார்கள். சிலர் மூழ்கிவிடுகிறார்கள். சிலர் வேடிக்கை பார்க்கிறார்கள்!” (ப.127).

சங்க இலக்கியத்தில் பாலைத் திணைப் பாடல்களே மிகுதி. அந்தத் திணை பிரிவின் துயரைப் பேசுவதாகும். பாலைப் பாடல்களை ஆண் புலவர்கள் பாடியுள்ளனர் என்றாலும் அவை தலைவியோ தோழியோ பாடுவதாகவே பெரிதும் அமைக்கப் பட்டுள்ளன. இதற்கான புள்ளிவிவரங்களைத் தருமிடத்தில் கரிகாலன் இப்படிச் சொல்கிறார்: “ஏனோ ஆண்களுக்கு பெண்களின் கண்ணீர் ருசி காலம் தோறும் பிடித்திருக்கிறது” (ப.47). இதை வாசித்தபோது “அனல் காற்று” நாவலில் ஜெயமோகன் எழுதிய ஒரு வரி நினைவுக்கு வந்தது: ”கண்ணீரும் பெண்களுக்கு ஓர் உறவுச்சம்.”

கரிகாலன் பெண்ணை வியந்தும் நயந்தும் கொண்டாடும் இடங்கள் ரசனையானவை. வெள்ளிவீதியாரைப் பற்றிச் சொல்லும்போது “பிரிவு என்பது வெளியாக, காலமாக இவரது கவிதைகளில் தோன்றி காமத்தின் அவதியைப் பிழிந்து தருகிறது” (ப.12) என்கிறார். மேலும், “ஆதி கானகத்தில் பெண்களே பருவங்களை அறிந்திருந்தார்கள். அவர்கள் உடல் ஐந்திணை நிலம், மனம்தான் பருவம்” (ப.38) என்று குறிப்பிடுகிறார். இவற்றில், இயற்பியலின் அடிப்படை அம்சங்களான வெளி மற்றும் காலம் (Space and Time) ஆகியவற்றின் பிரதிநிதியாகப் பெண்ணை அவதானிப்பது ஆழ்ந்த உளவியலும் மெய்யியலும் முயங்கிய ஒரு பார்வை ஆகிறது.

பெண் குறித்துப் பேசும்போது அவளுடலின் தனித்த அடையாளமாக இருக்கும் மார்பகம் பற்றியும் பேச வேண்டியதாகிறது. வருமுலையாரித்தி என்னும் சங்கப் பெண் புலவர் எழுதிய கவிதை பற்றிய கட்டுரையில் சில முக்கியமான செய்திகளைக் கரிகாலன் சொல்கிறார். ஆப்ரிக்க நாடுகளில் நிகழ்த்தப்படும் ‘முலை தேய்த்தல்’ என்னும் கொடூரமான சடங்கு பற்றி அவர் சொல்லும்போது திடுக்கிட்டேன். அறபு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் பெண்களுக்கான விருத்தசேதனச் சடங்கு என்னும் சிக்கலைப் பற்றி நினைவு கூர்ந்தேன்.

சங்க காலத்தில் ‘முலை’ என்னும் சொல் மிக இயல்பாகப் புழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று அது ஓர் அவையல் கிளவி (unparliamentary word) ஆகியுள்ளது. சங்கப் பெண் புலவோருள் ‘வருமுலையாரித்தி’ என்று ஒருவருக்குப் பெயரே இருந்திருக்கிறது என்பதையும் கரிகாலன் சுட்டிக் காட்டுகிறார். கழார் கீரன் எயிற்றியார் பாடிய பாடல்கள் பற்றிய கட்டுரையில் “முலை அழகியல்” பண்டைத் தமிழரிடம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இதுபோல், ஆங்கித்தில் ’பூப் ஈஸ்தடிக்ஸ்’ என்று எவராவது எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

மேற்சொன்ன கழார் கீரன் எயிற்றியார் எழுதிய நற்றிணை 312-ஆம் பாடலில் “எதிர்த்த தித்தி முற்றா முலையள்” என்று ஒரு தொடர் வருகிறது. அதில் உள்ள தித்தி என்னும் சொல்லுக்கு, “முலை முகட்டில் இருக்கும் கருமை” என்று கரிகாலன் அருஞ்சொற்பொருள் உரைத்துள்ளார். முலைக் காம்பினைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களான teats மற்றும் tits ஆகியவற்றுக்கு இச்சொல்லே மூலமாதல் வேண்டும். மொழி வல்லார் ஆய்க.


கரிகாலனின் இந்நூல் வழி சில சுவையான சொற்களையும் நாம் அறிகிறோம். சில உதாரணங்கள் காட்டுதும்:

அ) அணல் – தாடி என்பதற்கான தமிழ்ச்சொல் (’மையணல் காளை’ – புறநானூறு #83; ‘புல் அணலோன்’ – புறம் #299).

ஆ) அல்லங்காடி – இரவு முழுதும் இயங்கும் அங்காடி. சங்க காலத்தில் இருந்துள்ளது.

இ) வயா நோய் – கருவுற்ற பெண்டிர்க்கு முதல் மூன்று மாதங்களில் தோன்றும் மசக்கை.  

ஈ) கழிகல மகளிர் – விதவையர்; கைம்பெண்டிர்; widows. [மனைவியை இழந்த பின்னர் மறுமணம் செய்யாமல் துறவு கொண்ட ஆணைப் பற்றியும் ஒரு குறிப்புண்டு; இத்தனைக்கும் அவன் மகளிர் பலருடன் வாழ்ந்தவன்தான். (மாற்பித்தியார் எழுதிய புறநானூறு #251 & 252-ஆம் பாடல்கள்; சங்க காலத்து ஷாஜஹான்!)

ஆ) தொடலை – ஒருவர் ஒளிய பிறர் அவரைக் கண்டுபிடித்துத் தொட்டு விளையாடுவது. இன்றைய கண்ணாமூச்சு விளையாட்டு.

”தமிழர் ஒவ்வொருவரும் தம் நூலகத்தில் வைத்துப் போற்றும் நூலாக இது அமையும் என்பது திண்ணம். தமிழ் மாணவர்களுக்கு, முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு, இந்நூல் ஒரு அவசியமாக இருக்கும்” (ப.4) என்கிறார் கரிகாலன். அதுவே என் வாசிப்பின் வழி நான் இந்நூலுக்குத் தரும் மதிப்பீடுமாகும்.

இந்நூலினை ‘படைப்பு பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. அதன் உரிமையாளர் ஜின்னா அஸ்மி என்னும் முகம்மது அலி ஜின்னா நான் பணியாற்றும் ஜமால் முகம்மது கல்லூரியில், அப்போது நான் முதுகலைத் தமிழ் படித்த காலத்தில் எம்.சி.ஏ படித்துக் கொண்டிருந்தார். மரபுக் கவிதை எழுதுவதில் திறமை கொண்டவர். அவரின் முதல் கவிதைத் தொகுப்பு அந்த மாணவப் பருவத்திலேயே எம் கல்லூரி ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது. அந்த நூலுக்குத் தலைப்புச் சூட்டும் ஆலோசனைக் கூட்டம் என் அறையில்தான் நடந்தது. நண்பரும் எழுத்தாளருமான மானசீகன், நாவலரும் பேராசிரியருமான அப்துர் ரஹீம் ஆகியோர் உடனிருந்தனர். ‘வெளிச்சத்தின் முகவரி’ என்று அதற்குப் பெயர் சூட்டினோம். இது நடந்தது 2002-இல். அண்மையில்தான் மீண்டும் ஜின்னா அஸ்மியுடன் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் முந்நூறு நூற்களுக்கும் மேல் வெளியிட்டிருக்கும் பதிப்பாளராகத் திகழ்ந்து தமிழ்ப்பணி ஆற்றுகிறார். ’நோம் என் நெஞ்சே’ நூல் உருவாக்கத்தில் என் நண்பரின் பங்களிப்பும் இருப்பது கண்டு யாஅம் உவந்தனம் பெரிதே!

Friday, October 3, 2025

ஞானச் சுடர் எங்கும் பரவுக!

சகோதரர் முனைவர் எச்.முகம்மது சலீம் அவர்கள் தொகுப்பாசிரியராக உருவாக்கியிருக்கும் “தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள்” என்னும் நூலுக்கு ஆய்வுரை எழுதியுள்ளேன். அது அந்த நூலிலேயே இடம்பெற்றுள்ளது. அதனை இங்கே தருகிறேன்,

தக்கலையைச் சேர்ந்த சகோதரர் சலீம் அவர்கள் பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இலக்கிய மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான தோழர் ஹாமீம் முஸ்தஃபா அவர்களின் உறவினர். இந்நூலினை மணலி அப்துல் காதர் அவர்களின் நன்னூல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மூவருக்கும் எனது நன்றிகள்.


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

            அகிலங்களுக்கு அருட்கொடை ஆன அண்ணலெம் பெருமானார் மீதும் அன்னாரின் தூய குடும்பத்தார் மீதும் சத்திய சகவாசியர் மீதும் ஏகனின் பேரருள் என்றென்றும் இலங்கட்டுமாக.

            ”தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள்” என்னும் இந்நூலினை சகோதரர் ஹெச்.முஹம்மது சலீம் அவர்கள் அனுப்பித் தந்து அணிந்துரை எழுதப் பணித்தார்கள். இந்த ஆராய்ச்சி நூலுக்கு அணிந்துரை எழுதும் பேறு எனக்குக் கிடைத்திருப்பது இறைவனின் பேரருளால் மட்டுமேயாகும்.

            இந்நூல் இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்து கவியுளம் கண்டோரான அறிஞன்மார் ஐவரால் எழுதப்பட்ட பத்துக் கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறங்குகின்றது.

            ’தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள்’ தமிழ் என்னும் தருப்பணத்தில் படிந்து நம் கண்கள் கூசாத வண்ணம் அழகு காட்டுகின்றன.

            இவை மெய்ஞ்ஞானம் பேசும் கட்டுரைகளாகும். ஞானம் நவில்கையில் செவிநுகர் கனிகள் என்று சிந்தை சிலிர்ப்போர் சிலர். ஞானம் என்னும் சொல் காதில் விழும் கணத்தில் காத தூரம் கடுகி ஓடுவோர் பலர். ’கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்பதே இறைஞானியர் இந்த அவனியில் மக்கள் திரளிடம் அடைந்த அனுபவம். 

            எனினும், இதற்கென இஷ்டப்பட்டு உழைப்போர் இருப்பதால் இந்த ஞானக் கடை கஷ்டப்பட்டுத் தொடர்ந்தாலும் ஒருபோதும் நஷ்டப்பட்டு விடாது என்பது உறுதி. இதற்கு இறைக் காப்பே நிறை காப்பு.

            இந்நூலின் செம்பாகம் சகோதரர் முகம்மது சலீம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. 198 பக்க நூலில் அவர் எழுதியிருக்கும் நான்கு கட்டுரைகள் 103 பக்கங்கள் அமைந்து சரிபாதியாகத் திகழ்கின்றன. மேலும் இந்நூலில் தோழர் ஹாமீம் முஸ்தபா எழுதிய மூன்று கட்டுரைகள் உள்ளன. தக்கலை எம்.எஸ்.பஷீர், ரஹ்மத் ராஜகுமாரன், மற்றும் செந்தாமரை கே.பி.எஸ்.ஹமீது ஆகியோர் எழுதிய மூன்று கட்டுரைகளும் உள்ளன.

            சகோதரர் எச்.முகம்மது சலீம் அவர்கள் ஸூஃபி மெய்ஞ்ஞான இலக்கியங்களில், குறிப்பாக பீரப்பாவின் நூற்களில் பெரிதும் ஈடுபாடுள்ள பெற்றியர்; அவற்றில் ஆழ்ந்து தான் கண்டடைந்த கருத்துக்களை நீர்மையும் நேர்மையும் பொலிய வெளியிடுவதில் வெற்றியர்.

            பீரப்பாவின் ஞான இலக்கியப் பரவல் என்பது ஒரு தனிப்பெரும் அறிவுத் துறை என்று அவர் கண்டிருப்பதால் அதற்கு ‘அப்பாவியம்’ என்னும் அழகிய பெயரும் அளித்திருக்கிறார்.

            அன்னார் எழுதியுள்ள ’இயற்கைப் பாடம்’, ‘எண்ணெண்ப’, ‘எழுத்தென்ப’, ’அப்பாவியம்’ ஆகிய நூற்களை நான் வாசித்து ஆன்மிக உணர்வுக்கு ஊட்டமும் அறிவுக்குப் பயனும் அடைந்திருக்கிறேன். அவ்வழியில், இந்நூல் இன்னுமொரு நன்னூல்.

            படைப்பினையும் படைப்பாளனாகிய இறைவனையும் தனித்தும் தொடர்பு படுத்தியும் அறியும் நிலையே மெஞ்ஞானமாகும்” என்று இந்நூலினுள் அவர் குறிப்பிடுகிறார். இது, அவரது அறிவுத் தெளிவுக்குச் சான்றாகும். ஏக இறைவன் தன் படைப்புக்களுடன் இருந்தாலும் அவன் ஒருபோதும் படைப்பாகிவிட மாட்டான், படைப்பு ஒருபோதும் இறைவனாகிவிடாது என்னும் கொள்கைத் தெளிவினை இது காட்டுவதுடன், இறைவனை “ஷஃ’னே தன்ஸீஹ்” மற்றும் “ஷஃ’னே தஷ்பீஹ்” (தனித்திருத்தல் மற்றும் உடனிருத்தல்; Transcendence & Immanence) ஆகிய நிலைகளில் விளக்கித் தரும் ஸூஃபிகளின் பார்வையையும் இந்த வரையறை சுட்டிக் காட்டுகிறது.

            ஞானக் குறம் பற்றி எழுதும்போது, ”கைக்குறி கூறுதலில் மணல்கூட்டி கூடற்சுழி குறித்து கூறும் குறமரபு இழ்ழைந்தோடக் காண்கிறோம். சீவக சிந்தாமணி, முத்தொள்ளாயிரம், திருச் சிற்றம்பலக் கோவை போன்ற நூல்களில் காணப்படும் குறமரபு இங்கும் பேணப்படும் பான்மை காண்கிறோம்” என்று நூலாசிரியர் தரும் பதிவு தமிழ் இலக்கியப் பரப்பில் அவருக்கிருக்கும் தோய்ந்த வாசிப்பினைக் காட்டும்.


            
பீரப்பா தான் எழுதிய செம்பாக நூற்களுக்கு ஞானம் என்னும் சொல் பிறங்கும் தலைப்புக்களைச் சூட்டியுள்ளார். அந்தத் தலைப்புக்களுக்கு இடையிலான பொருத்தப்பாடுகளின் பக்கம் சலீம் அவர்கள் சமிக்ஞை காட்டியுள்ளார் என்பதையும் நான் கண்டு கொண்டேன். ’ஞானப் பூட்டு’ என்னும் நூலின் தலைப்புடன் ’ஞானத் திறவுகோல்’ என்னும் நூற்றலைப்பைப் பொருத்தி, “அரிய மெஞ்ஞானப் பெரும் பொருளை பூட்டிவைத்த பொக்கிஷமாய் ஞானப் பூட்டில் வழங்கிய பீர்முஹம்மது சாஹிபு அப்பா அவர்கள் மறவாமல் ஞானத் திறவுகோலையும் தந்து சென்றுள்ளார்கள்” என்று கூறும் நயம் நனி இனிது.

            இக்குறிப்பினை வாசித்தபோது என் சிந்தை இதே திசையில் சிந்தித்து பீரப்பாவின் நூற்தலைப்புகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தி அர்த்தம் எடுத்து மகிழ்ந்தது. மஹரிபத்து மாலை அணிந்த ஞானக் குறவஞ்சி ஞானத் தித்தி ஊதியபடி ஞான நடனம் ஆடுகிறாள். அவளுக்கு மெஞ்ஞானக் களஞ்சியம் ஒன்று பரிசளிக்கப்படுகிறது. ’பிஸ்மில்’ ஓதி ஞானப் புகழ்ச்சி செய்து அவள் அதன் ஞானப் பூட்டை ஞானத் திறவுகோலால் திறக்கிறாள். அதனுள் ஞான முச்சுடர் வீசும் ஞான ரத்தினங்களை ஞானக் கண்ணால் கண்டு ஞான ஆனந்தக் களிப்பு எய்துகிறாள்.  இவ்வாறு ஞான விகடச் சமர்த்தாக யோசித்துப் பார்த்து மகிழ்ந்தேன்! இது ஓர் உவகைக் கற்பனைதான்.

            ’சீரியஸ்’ சிந்திப்பிற்கு இன்னொன்று சொல்வேன். ஞானப் பூட்டு முழுமையாய்க் கிடைத்திருக்க, ஞானத் திறவுகோல் என்னும் பனுவலின் காப்புப் பாடல் ஒன்று மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது என்னும் செய்தியை நான் ஓர்ந்தேன். ஞான வாழ்வு என்பதே அப்படித்தானே? தான் என்னும் பூட்டு அனைவரிடமும் இருக்கிறது. அதன் திறவுகோல் அத்தனை எளிதில் கையளிக்கப் படுவதில்லை. மிகுந்த தேடலுக்குப் பின்னரே அது கிடைக்கிறது. எனவே, அப்பா உரைத்த ஞானத் திறவுகோலை நாம் தேடித்தான் அடைய வேண்டும் என்று இறைவன் மறைத்துவிட்டான் போலும். இந்தக் காப்புப் பாடலில், “ரப்பனா திறவுகோல் தந்து எனைக் காத்தருள்” என்று பீரப்பா பிரார்த்திப்பது போல் அந்தத் திறவுகோலை இறைவனேதான் ஒருவருக்குத் தந்தருள வேண்டும்.

            தோழர் ஹாமீம் முஸ்தபா அவர்கள் இற்றைச் சூழலில் மிகக் காத்திரமான சமூக அரசியல் கவிதைகளை எழுதி வருபவர். ’தமிழின் மஹ்மூது தர்வேஷ்’ என்று அவரை அழைக்கலாம். இந்நூலில் இடம்பெற்றிருக்கும் அவரின் கட்டுரைகள் நவீன ஆய்வுப் பார்வைகளுடன் எழுதப்பட்டுள்ளன. ‘மாலை’ என்னும் சிற்றிலக்கிய வகை பற்றிப் பேசுமிடத்தில் அவர் தரும் அவதானங்கள் கூர்ந்து நோக்குதற்கும் மேலாய்வு செய்தற்கும் உரியவையாக உள்ளன. ”சிற்றிலக்கிய வடிவமாக மாலை இருந்தாலும் தமிழில் இஸ்லாம் சமயம் சார்ந்து உருவான இலக்கியங்களுக்கு மாலை என்று பெயர் குறிப்பிடும் வழக்கம் இருந்ததாகத் தெரிகிறது” என்று அவர் குறிப்பிடுவதை ஓர்ந்தால் ’மாலை’ மயக்கம் நீங்கித் தெளிவு பிறக்கும்.


            
”முன்பெல்லாம் சில முஸ்லிம் வீடுகளில் புறாக்கின் ஓவியம் சுவரில் மாட்டப்பட்டிருக்கும்” என்று ஹாமீம் முஸ்தபா தரும் செய்தியும் பரந்துபட்ட ஆய்வு ஒன்றிற்கான களம் ஆகும். சில வீடுகளில் நானும் அந்த ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். கடைசியாக அதை நான் திருச்சி நத்தர்வலி தர்காத் தெருவின் நுழைவாயிலுக்கு எதிர்ப்புறம் அமைந்திருக்கும் ’சாந்த் மஸ்தான் தர்கா’வில் கண்டேன். இன்றும் அது இருக்கக்கூடும். இந்த ஓவியத்தை முதன் முதலில் வரைந்தவர் யார்? அது தமிழகத்துக்கு எப்போது யாரால் வந்துற்றது? என்றெல்லாம் வினா எழுப்பி விடைகள் காணும்போது பல்பண்பாட்டு நுட்பங்கள் பலவற்றை நாம் அறியலாம்.

            ”பொதுவாக தமிழ் மரபில் நின்றுகொண்டு காப்பிய இலக்கியம் படைப்பவர்கள் தமிழ்நாட்டின் நிலவியல் பின்புலம் சார்ந்து அவற்றைப் படைத்தளிப்பது என்பது ஒரு மரபாகப் பேணப்பட்டு வருகிறது” என்று ஹாமீம் முஸ்தபா எழுதுகிறார். சீறாப் புராந்த்திலும் அறபு நாட்டை ஐநில வருணனையுடன் உமறுப் புலவர் வரைந்து காட்டுகிறார். அதற்குக் காரணம் இந்த இலக்கிய மரபுதான். செய்யுள் வழக்கு மற்றும் நாடக வழக்கு என்று தொல்காப்பியம் குறிப்பிடும் இலக்கணங்களை அறிந்தால் இதில் குழப்பம் ஏற்படாது. அறபு நிலம் பெரிதும் பாலைவனமாக இருப்பது நாடக வழக்கு (எதார்த்த நிலை) ஆகும். அறபு நிலத்தை ஐவகை நிலங்கள் கொண்ட ஒன்றாகப் பாடுவது தமிழிலக்கணத்தைப் பின்பற்றி இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் வகுத்துக் கொண்ட செய்யுள் வழக்காகும். இதில் தவறு ஏதும் இல்லை.

            ’புறாக்’ என்னும் விண்புரவியின் பெயர் இஸ்லாமிய நவீன உலகில் செலுத்தும் தாக்கத்திற்கு ஹாமீம் முஸ்தபா பல உதாரணங்களைக் காட்டியுள்ளார். விமான நிலையம், ஆளில்லாப் போர் விமானம், விண்வெளி மையம், கடல்சார் சேவை மையம் முதலியவற்றுக்கு புறாக் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். என் உறவினர் ஒருவர் தன் மகிழுந்துக்கு புறாக் என்று பெயர் சூட்டியிருப்பதும், என் வசிப்பிடப் பகுதியில் ’புறாக்’ என்னும் ஆட்டோ ஒன்று ஓடுவதும் நினைவுக்கு வருகிறது. இவையும் அதன் தாக்கம் உணர்த்தும்.


            
ஆலிப்புலவர் இயற்றிய ’மிகுறாஜ் மாலை’யில் ஒரு பகுதியின் பெயர் “அறுஷியல்”. இச்சொல்லினை இனாம்குளத்தூர் ஷாகுல் ஹமீது ஹஜ்ரத் (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். “அரசியல் மீது நமக்கு நம்பிக்கை இல்லை; நாம் அர்ஷியல் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று அவர்கள் சொல்வதை இங்கே நினைவு கூர்கிறேன்.

            இந்நூலின் வழியாக நாம் அறியலாகும் இன்னொரு முக்கியமான பண்பாட்டு அம்சம் இஸ்லாமிய இலக்கியங்களின் முற்றோதலாகும். ஹாமீம் முஸ்தபா எழுதியுள்ள ”முற்றோதல் மரபும் இஸ்லாமிய இலக்கியங்கள் முற்றோதப்படுதலும்” என்னும் கட்டுரை இந்த மரபின் நீள அகலங்களைத் துலக்கிக் காட்டுகிறது. அவர், இந்த முற்றோதல் மரபு பற்றி எப்போதும் சிலாகித்துப் பேசுபவர் என்பதை அவருடன் பழகியோர் அறிவர்.

            ”வலிமார்கள் எனப்படும் இறைநேசர்கள், சூஃபிகள் இவர்களிடம் தொழிற்பட்ட முக்கியமான குணங்களுள் ஒன்று இஸ்லாத்தை வட்டாரப்படுத்துதல்” என்று ஹாமீம் முஸ்தபா கூறுவது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த வட்டாரப்படுத்தல் மீது உலகமயமாக்கலின் காலச் சூழல் வழி ஒற்றை மயமாக்குதல் செலுத்தும் தாக்கத்தினை விரிவாகப் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது.

            ”இஸ்லாம் உருவான நிலப்பரப்பான அரபு வட்டாரத்தில் தரீக்காக்கள் சார்ந்த எத்தகைய அசைவுகளும் இல்லை” என்று ஹாமீம் முஸ்தபா சொல்வது சவூதிக் குடும்பத்தின் வல்லாட்சி உருவான காலத்திற்குப் பின் ஏற்பட்ட நிலையைக் குறிப்பதாக விளங்குகிறேன். இதுவும் விரிவான உரையாடலுக்குரிய ஒரு புள்ளியாகும்.

            ஹாமீம் முஸ்தபா எழுதியுள்ள “16, 17 நூற்றாண்டு குமரி மாவட்டமும் தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களும்” என்னும் கட்டுரையும் வரலாற்று நோக்கில் குமரி மாவட்டம் பற்றிய சுவையான செய்திகளை நல்குகின்றது.

            ”கோட்டாறு புலவர் ஞானியார் ஷெய்கு முகியித்தீன் மலுக்கு முதலியார்” என்னும் கட்டுரையில் பன்னூலாசிரியர் தக்கலை எம்.எஸ்.பஷீர் “தீட்சை அளித்தவர்” என்னும் உட்தலைப்பின் கீழ் இப்படி எழுதுகிறார், ”சூபி ஞானி மன்சூர் ஹல்லாஜின் சீடர்களில் ஒருவரான மௌலானா செய்யிது தமீம் குதுபுஸ்ஸமான் மௌலானா செய்யிது ஜமாலுல் மாஹீ பரிய்யி ஆவார் என அறியப்படுகிறது.” இந்தச் செய்தி கருத்து மயக்கத்தை ஏற்படுத்துகிறது. இவர்தான் கோட்டாறு ஞானியாருக்கு தீட்சை வழங்கினாரா? அப்படிச் சொல்ல இயலவில்லை. மன்ஸூர் ஹல்லாஜ் (ரஹ்) அவர்களின் காலம் பொ.ஆ 858 – 922 (ஹிஜ்ரி 244 – 309); கோட்டாறு ஞானியாரின் காலம் பொ.ஆ 1769 – 1794 (ஹிஜ்ரி 1167 – 1209) ஆகும். இருவருக்கும் இடையே எட்டு நூற்றாண்டுகள் இடைவெளி இருப்பதால் மன்ஸூர் ஹல்லாஜின் சீடரிடம் இவர் நேரடியாக தீட்சை பெற்றிருக்க வாய்ப்பில்லை என்பது போதறும். கோட்டாறு ஞானியார் அவர்கள் மானசீக தீட்சை பெற்றிருப்பார் என்றே கருத முடிகிறது. ’நாஞ்சில் நன்மொழியோன்’ எழுதிய இக்கட்டுரை வழி ஞானியாரப்பாவின் அகப் பரிமாணங்களை நான் அறிந்து மகிழ்ந்தேன்.

இக்கட்டுரைப் பொருண்மையின் மேல் விளக்கங்களை இந்நூலின் இறுதிக் கட்டுரையான “ஞானியார் சாகிபு: ஓர் அறிமுகமும் சில பகிர்வுகளும்” என்னும் கட்டுரை தருகிறது. [இக்கட்டுரையின் அடிக்குறிப்பு எண்#3 ஞானியார் சாகிபிற்கு தீட்சை அருளியவர் குறித்துக் குறிப்பிடுகிறது. அதிலும் ஆண்டுக் கணக்கு இடிக்கிறது. கோட்டாறு வந்துற்ற அந்த மகான் ஹல்லாஜிய்யா ஞானக் கொடிவழியில் வந்த ஒருவராதல் வேண்டும் என்பதே சாத்தியம்.] இக்கட்டுரையை இயற்றிய செந்தாமரை கே.பி.எஸ்.ஹமீது அவர்கள் ஞானியார் சாகிபின் கொள்ளுப் பேரரும், சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரின் மகனாரும் என்பதால் ஹல்லாஜிய்யா தரீக்கா குறித்தும் ஞானியார் சாகிபு குறித்தும் அவரால் நேரடி அனுபவத்திலிருந்து பேச இயல்கிறது. அதே சமயம் ஹல்லாஜிய ஞான முழக்கம் கருத்துப் பிறழ்வுகளுக்கும் வழி வகுத்துவிடும் வாய்ப்புகள் உண்டு என்று அவர் உரைப்பது ஞான முதிர்வு அடையாத இளம் பிள்ளைகளுக்கும், ஞான சூன்யர்களான அறியாப் பிள்ளைகளுக்கும் ஓர் எச்சரிக்கை ஆகும். இதற்கு மேல் இக்கட்டுரை பற்றிப் பேசாமல் ‘சுருட்டி மறைக்க’ வேண்டும் என்று உணர்கிறேன் எனில் அது எவ்வளவு ஆழமான ஒன்று என்பது புலப்படும்.

            ”வேதபுராணம்” என்னும் ஒப்பரிய ஞானப் பனுவலினை இன்பத் தமிழில் இயற்றி மாநிலம் பயனுற அளித்த மகான் நூஹ் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்கள் பற்றி ரஹ்மத் ராஜகுமாரன் எழுதியுள்ள கட்டுரை அற்புதங்கள் நிறைந்த அன்னாரின் வாழ்க்கை குறித்த கோட்டுச் சித்திரமாக அமைந்துள்ளது. குச்சி, எலியின் உடல், தன் உடல், ஒரு ஆன்மிகக் குழுவினரின் உடல்கள் ஆகியவற்றின் துண்டான பகுதிகளை மீண்டும் ஒட்ட வைத்து முழுமைப்படுத்தும் அற்புதங்கள் விரிவதால் இந்தக் கட்டுரைக்கு “உறுப்புக்களை ஒட்ட வைக்கும் மகான் நூஹ் லெப்பை ஆலிம் (ரஹ்)” என்று ர.ரா தலைப்பிட்டுள்ளார். இப்னு அறபி (ரஹ்) அவர்களின் ‘ஃபுஸூசுல் ஹிகம்’ நூலைக் கசடற கற்றல் – கராமாத் என்னும் அற்புதங்கள் – விசித்திரமான ஒரு சூழலில் திருமணம் – இல்லற வாழ்க்கை – வேத புராணம் இயற்றல் – இறப்பு என்னும் கட்டங்களாக அமைந்த ஆலிமவர்களின் வாழ்க்கையில் இருந்து அற்புதங்கள் நிகழ்ந்த பகுதியை பெரிதும் முன்னிறுத்துவதால் இத்தலைப்புப் பொருத்தமாக உள்ளது.

            ஆயிரம் கட்டுரைகள் எழுதிய பின்னும் அயராது எழுதி எழுதி மேற்செல்லும் ர.ரா அவர்களது கட்டுரையின் தொடர்ச்சி போல் முகம்மது சலீம் எழுதிய “வேதபுராணம் என்னும் ஞான வித்தகம்” என்னும் இச்சிறு கட்டுரை அமைந்துள்ளது. இதில் வேதபுராணத்தின் கட்டமைப்பை வரைந்து காட்டிய பின்னர், “தமிழ் சூபி இலக்கிய வெளியில் பயிற்சியும் ஆர்வமும் உள்ள ஆய்வறிஞர்கள் வேதபுராணம் குறித்து ஆழமாக ஆய்வு செய்து இந்த பேரறிவுக் களஞ்சியத்தின் அருமை பெருமைகளைத் தமிழ் இலக்கிய உலகம் உணர வழிவகை செய்ய வேண்டும்” என்று முகம்மது சலீம் குறிப்பிட்டுள்ளார். அவர் கோரும் அப்பணி பெரும்பணியும் அரும்பணியும் ஆகும். மகான் நூஹ் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்கள் தன் இளம் பருவத்தில் ஷைகுல் அக்பர் இப்னு அறபி (ரஹ்) எழுதிய “ஃபுஸூசுல் ஹிகம்” என்னும் நூலினை ஆழ்ந்து கற்றவராதலால் அதன் அகமிய வெளிச்சத்தில் வேதபுராணத்தை எழுதியிருப்பார் என்று அனுமானிக்கலாம். இந்த அனுமான நோக்கில் வேதபுராணம் ஆராயப்படல் வேண்டும். ஆர்.பி.எம் கனி அவர்கள் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகட்கு முன் வெளியிட்ட “மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்” என்னும் நூல் ஃபுஸூசுல் ஹிகம் நூலின் தோராயமான மற்றும் முழுமையல்லாத தமிழாக்கமாகத் திகழ்கிறது. அந்நூலின் முழுமையான தமிழாக்கத்தை இறைஞானி ஹகீமி ஷாஹ் ஃபைஜி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் செய்து அச்சுக்கு ஆயத்தம் ஆகி வருகிறது. அந்நூல் வெளியாகும் பட்சத்தில் மேற்சொன்ன ஆராய்ச்சிக்கு வழி பிறக்கும், இன் ஷா அல்லாஹ்.

            பீரப்பா அவர்கள் கேரளாவின் பீர்மேடு முதல் குமரிமுனை வரை புலங்கள் பல பெயர்ந்து தவமியற்றினார்கள் என்பது போன்றே பல திசைகளில் இருந்தும் பயணித்து வந்த ஞானச் செய்திகளை உள்வாங்கி கிரகித்து உண்மை கண்டு அவற்றைத் தன் இலக்கியங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஞானமணி மாலையில் பீரப்பா ஓர் உருவகக் கதையும் அதற்கு விளக்கமும் உரைக்கிறார்கள். அந்தக் கதை ஜென் ஞான நெறியிலும் இந்து மத வேதாந்த நெறியிலும் காணக் கிடைக்கிறது! ஒரே கதை பல்வேறு சிந்தனைப் பள்ளிகளால் தமக்குத் தகுந்தபடி பிரதியாக்கப்படும் என்பதற்கு இஃதொரு சான்று.

            “சூழ்வனத்தில் ஒரு சோம்பி இருந்தாற்போல் மாளவிருக்கும் மனிதர்காள்” என்று நம்மை அழைத்து அந்தக் கதையைச் சொல்கிறார் பீரப்பா. “புலி ஒன்று ஒருவனைத் துரத்துகிறது. அவன் ஓடிப் போய் ஒரு கிணற்றில் விழுகிறான். கிணற்றுக்குள் கொடி ஒன்று படர்ந்துள்ளது. அதை அவன் பிடித்துக் கொண்டு தொங்குகிறான். மேலே இருந்து அந்தப் புலி அவனை கவனித்துக் கொண்டு நிற்கிறது. அப்போது அந்த வேரினை இரண்டு எலிகள் கடிக்க ஆரம்பிக்கின்றன. அவன் கீழே பார்க்கிறான். நீர் இல்லாத அந்தப் பாழ் கிணற்றில் நெருப்பும் தேளும் பாம்பும் கிடக்கின்றன. இப்போது அவன் எப்படி மகிழ்ச்சி அடைய முடியும்?” என்பதே கதை. இதற்கான விளக்கத்தையும் பீரப்பா உரைக்கிறார்: “துரத்திய புலி என்பது மரணம் ஆகும். கிணறுதான் இந்த உலகம். அவன் பிடித்த கொடிதான் இன்றைய நாள். அந்தக் கொடியைக் கடித்து நறுக்கும் எலிகள்தாம் பகலும் இரவும் (சூரியனும் நிலாவும்).”

            ஜென் தத்துவக் கதைகளில் இதன் பிரதி சற்று வேறுபடுகிறது. அந்த மனிதன் பிடித்திருக்கும் கொடியில் கொத்தாகப் பழங்கள் தொங்குகின்றன. மேலே நிற்கும் புலியையும் கீழே கிடக்கும் விஷ ஜந்துக்களையும், தான் பற்றியிருக்கும் கொடியை நறுக்கும் எலிகளையும் மறந்து அவன் பழங்களைப் புசிக்கிறான். ’ஆஹா, எம்புட்டு ருசி!’ என்று மகிழ்கிறான். இவ்வுலகை அனுபவித்தல் என்பது இத்தகையதே என்பது ஜென் கதை உணர்த்தும் நீதியா? இருக்கலாம். சிலர் வேறு கோணத்திலும் விளக்குகின்றனர். அதாவது, வாழ்வில் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதிலும் மகிழ்ச்சி நல்கும் விடயங்கள் இருக்கவே செய்யும், அதை நாம் அடையாளம் காண வேண்டும் என்று சொல்கின்றனர்.

            சரி, அவன் எவ்வளவு நேரம்தான் அந்தப் பழங்களை ருசிக்க முடியும்? எலிகள் அந்தக் கொடியை நறுக்கிவிட்டால் அவன் கீழே விழுந்து செத்துவிடுவானே? இப்போது அவன் எப்படித் தப்பிப்பான்? என்று வினாக்கள் எழுகின்றன. இந்தக் கதைக்கு வேதாந்திகளின் பிரதி விடை சொல்கிறது. அவர்கள் இக்கதையில் அந்த மனிதனின் நண்பனை வர வைக்கிறார்கள். அவன் ஒரு சிறந்த் வேடன். அவன் அந்தப் புலியை விரட்டிவிட்டு, கிணற்றுக்குள் கிடக்கும் மனிதனிடம் ஒரு கயிற்றைப் போடுகிறான். கிணற்றுக்குள் கிடப்பவன் கொடியை விட்டு அந்தக் கயிற்றைப் பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் அந்த நண்பன் அவனை மேலே இழுத்துக் காப்பாற்றிவிடுவான். அந்த நண்பன்தான் குருநாதர். அவர் வீசும் கயிறு என்பது அவர் வழங்கும் தீட்சையும் பயிற்சியும் ஆகும்.

            இந்த நூலினை நான் வாசித்தபோது என் சிந்தையில் சுடர்ந்த சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு என் அணிந்துரையை நிறைவு செய்ய விழைகிறேன்.     


   

            பீரப்பா, ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா, மற்றும் உமறுப் புலவர் ஆகியோர் சமகாலத்தவர் என்றாலும் மூவருள் உமறுப் புலவரே ஏனைய இருவரினும் மிக இளையவர். பீரப்பாவின் பாடல்களை உமறுப் புலவர் அறிந்திருக்க வேண்டும் என்று கருதலாம். பீரப்பாவின் தாக்கமும் அவரின் பாடல்களில் இருக்க வாய்ப்பு உண்டு. உதாரணமாக, “கருவுருவாய்த் திருவுருவாய் கருவிலுறு மருவுருவாய் திருவுருவாய்…” என்று இறைவனை வருணித்துச் செல்கிறது பீரப்பா பாடிய ’ரோசு மீசாக்கு மாலை’யின் திறப்புச் செய்யுள். உமறுப் புலவர் இயற்றிய சீறாப்புராணத்தின் காப்புச் செய்யுளிலேயே இதன் தாக்கத்தைக் காண்கிறோம்:  ”திருவுருவாய் உணருருவாய் அறிவினொடு தெளிவிடத்துஞ் சிந்தியாத / அருவுருவாய் உருவுருவாய் அகம் புறமும் தன்னியலா வடங்கா வின்பத் / தொருவுருவாய் இன்மையினில் உண்மையினைத் தோற்றுவிக்கும் ஒளியாய் யாவும் / மருவுருவாய் வளர்காவல் முதலவனைப் பணிந்துள்ளி வாழ்த்து வாமே.”  இது போல் சீறாப் புராணத்தில் எங்கெல்லாம் பீரப்பாவின் தாக்கம் இருக்கிறது என்று ஒரு தனி ஆய்வே நிகழ்த்தலாம்.

            பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார், ஆலிப்புலவர் போன்ற மெய்ஞ்ஞானியர் யாத்த பனுவல்களைப் பற்றி ஆராய்ச்சியுடன் விளக்கி எழுதப்படும் நூலொன்று பாமரர் ஈடுபட்டு வாசிக்கும்படி அமைவது சாத்தியமில்லை என்றே சொல்லிவிடலாம். எல்லோர்க்குமான எளிய அறிமுக நூலாக இத்தகைய நூற்கள் எழுதப்படும்போது மெய்ஞ்ஞானம் மழுக்கப்பட்டு ஒளி குறைந்துவிடும் வாய்ப்புள்ளது. அதே சமயம், பொது மக்களும் இதனை எடுத்து வாசிக்க ஆர்வமுறும் வகையில் எழுதுவது அவசியமாகிறது. இதனை எப்படிச் சாதிப்பது? முடிந்த அளவு பிறமொழி மேற்கோள்களைத் தவிர்ப்பது ஒரு வழி. விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய நூலான “தி ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” என்பது உலகெங்கும் பேரெண்ணிக்கையில் விற்பனை ஆன ஒன்றாகும். அதன் முன்னுரையில் அவர் சொல்வார்: “என் பதிப்பாளர் என்னிடம் சொன்னார், ’நீங்கள் இந்நூலில் இடும் ஒவ்வொரு அறிவியல் சூத்திரமும் சமன்பாடும் இந்த நூலின் விற்பனையைப் பாதியாகக் குறைத்துவிடும்.’ எனவே இதில் நான் முடிந்த அளவு அறிவியல் சூத்திரங்களையும் சமன்பாடுகளையும் தவிர்த்திருக்கிறேன்.” இந்த உத்தி இந்நூலிலும் கையாளப்பட்டுள்ளது.

            உதாரணமாக, “பரமா நபியைப் படைத்திலையாகிற் படைப்பொன்றும் இல்லை என்று உரமாய் மொழிந்த என் உத்தமனே” என்னும் பீரப்பாவின் மேற்கோளைக் காட்டும்போது, “லவ்லாக்க லவ்லாக்க லமா ஃகலக்த்தல் அஃப்லாக்” (நபியே! நீவிரில்லை எனில் வானாதிகளைப் படைத்திரேன்) என்னும் அறபி மேற்கோளினை எழுதலாம். அதேபோல், ”பெருகு தொன்னூறோடொன்பதும் அரிய திருநாமமென்று” என்னும் வரியின் செய்திக்கு, “இன்ன லில்லாஹி திஸ்’அத்த வ திஸ்’ஈன இஸ்மன், மிஃத்த இல்லா வாஹிதா” (திண்ணமாக அல்லாஹ்வுக்கு தொன்னூற்றொன்பது பெயர்கள் உள, நூற்றுக்கு ஒன்றின்றி) என்று அறபி மேற்கோள் எழுதலாம். [இப்படி எழுதுவதில் இன்னொரு சிக்கலும் உண்டு. ஸூஃபி வட்டங்களில் புழக்கத்தில் உள்ள சில ஹதீஸ்களுக்கு எடுகோள் காட்ட இயலாது. அவற்றை ஏற்கும் விடயத்தில் பெரிய ஆராய்ச்சிகளைத் தனியே விளக்கமாக எழுத வேண்டியிருக்கும். மேலே நாம் சுட்டிய இரண்டு ஹதீஸ்களில் முதலாவது இதற்கு ஒரு சான்று. இரண்டாவது ஹதீஸுக்கான எடுகோள்: ஸஹீஹுல் புஃகாரி #7392.] இப்படி அறபியில் மேற்கோள் காட்டி எழுதும்போது பொது வாசகரிடம் அந்நூல் வரவேற்புப் பெறாமல் போய்விடக்கூடும். ஆனால், அத்தகு சான்றாதார எடுகோள்கள் காட்டப்படாத பட்சத்தில் ஆராய்ச்சி நூலின் வலிமை சற்றே குறைபடும் என்பதும் எதார்த்தம். இந்நூலின் கட்டுரையாளர்கள் இவ்விரண்டு நிலைகளுக்கும் நடுநின்று எழுதியுள்ளார் என்பது என் அவதானம்.

            ’தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள்’ நாற்றிசையும் பரவி ஞான வெளிச்சம் இலங்கட்டும்.

Monday, July 14, 2025

சூத்திரம் போல் வேண்டுமடா மதிப்பீடு

 


 

            கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் என்று பல வடிவங்களில் இலக்கியம் எழுதப்படுகிறது. அடுத்து அவற்றின் மீது விமர்சனமும் மதிப்பீடும் எழுகின்றன.

            விமர்சனமும் மதிப்பீடும் காய்தல் உவத்தல் இன்றிச் செய்யப்பட வேண்டும் என்று நியதி இருந்தாலும் அது முற்றிலும் அவ்வாறு நிகழ்வதில்லை. அதில் தவறொன்றும் இல்லை.

            ஓர் இலக்கியம் எல்லோருக்கும் ஒரே மாதிரி பிடித்திருக்கும் என்று கூற முடியாது. ஒருவருக்கு இனிக்கும் அதே இலக்கியம் வேறொருவருக்குக் கசக்கிறது. எனவே, விமர்சனங்களும் மதிப்பீடுகளும் வேறு படுகின்றன.

            ’இப்போதெல்லாம் இலக்கியம் படைக்க நிறைய பேர் இருக்கிறார்கள். உருப்படியாக விமர்சனம் எழுதத்தான் ஆளில்லை. நீங்கள் எழுதுங்கள் சார்’ என்று அவ்வப்போது என்னிடம் கவிஞரும் கதைஞருமான ஜார்ஜ் ஜோசப் சொல்லி வருகிறார்.

            எனக்கு விமர்சனக் கட்டுரைகள் எழுத நினைத்தாலே அலுப்புத் தட்டுகிறது. அத்துறையில் காத்திரமாகத் தொடர்ந்து இயங்க என்னால் இயலாது என்றே உணர்கிறேன்.

            எனினும், தோழர்களுடன் உரையாடும்போது இலக்கியம் குறித்த விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவே செய்கிறோம். மிகப் பெரிய ஆராய்ச்சியின் முடிவை ஓரிரு வாக்கியங்களில் செறிவாகச் சொல்லிவிடுவது நிம்மதியாகவும் திருப்தியாகவும் இருக்கிறது.


            இதற்கு முன்னோடி ‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய விடிவெள்ளி’யாய் வந்த மகாகவி பாரதி.

            ஈராயிரம் ஆண்டுகளின் இலக்கிய நெடுவெளியை ஆராய்ந்து அவன் உரைத்த தீர்ப்பினைத் தமிழுலகம் ஒப்புகின்றது; அதைத் திருத்தும் தேவை இன்றி அப்படியே இதுகாறும் செப்புகின்றது. அவன் தந்த மதிப்பீடு அனைவரும் அறிந்ததுதான்:

            ”யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்ஙனுமே பிறந்ததில்லை

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை”

            ’ஊருக்கு நல்லது சொல்வேன், எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்னும் கோட்பாடு கொண்ட பாரதி, இங்கே தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லியிருக்கிறான். ஆனால், அந்த உண்மையைத் தெரிந்து கொள்ள அவன் நீண்ட ஆராய்ச்சியைச் செய்திருக்கிறான் என்பது ‘யாமறிந்த புலவரிலே’ என்பதில் இருந்து தெரிய வருகிறது. அதற்காக, தான் அறிந்த மொழிகளில் விரிவாக வாசித்து அளந்திருக்கிறான் என்பது “பூமிதனில் யாங்ஙனுமே” என்பதில் வெளிப்படுகிறது.

            இதிலிருந்தே கவிதைக்கும் அதன் விமர்சனத்துக்குமான கோட்பாடு ஒன்றினை வரைந்து கொள்ள முடிகிறது. ’மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்று கவிதைக்கு பாரதி ஏற்கனவே கோட்பாடு தந்திருக்கிறான். செறிவும் சுருக்கமும் மந்திர லட்சணம். இவ்வழியில், ‘சூத்திரம் போல் வேண்டுமடா விமர்சனம்’ என்று ஒரு கோட்பாடு என் எண்ணத்தில் எழுகிறது.

            வேதங்களுக்கு விளக்கவுரை செய்வதற்கும் இந்த நியதியை அவன் சமிக்ஞை காட்டியிருக்கிறான்: “வேதத் திருவிழியாள், அதில் மிக்க பல்லுரை எனும் கரு மை இட்டாள்.”

            ’வேதம் விழி போன்றது. அதற்கான உரை கண்ணுக்குத் தீட்டும் மை போன்றது. மையை அதிகமாக அள்ளி அப்பக் கூடாது. அது கண்ணுக்கு அழகு நல்காது. அது கண்ணுக்குக் கேடாகிவிடும். மையைக் குறைவாகவே தீட்ட வேண்டும். அதுபோல், வேதத்துக்கு கொஞ்சமாகவே விளக்கம் உரைக்க வேண்டும்’ என்று பாரதி கூறுவதாக இதன் உட்பொருளை தி.ந.இராமச்சந்திரன் அவர்கள் பேசிக் கேட்டிருக்கிறேன்.

             மதிப்பீடுகள் உரைத்தால் இப்படி இருக்க வேண்டும். சிலர் அதை வார்த்தை விளையாட்டாக மாற்றி விடுவது உண்டு. உடன் என் நினைவுக்கு வரும் உதாரணங்கள் இரண்டு:

  1. “தமிழுக்கு கதி கம்பனும் திருவள்ளுவனும்” [பாரதி சொன்ன மூவரில் இங்கே இளங்கோவுக்கு இடம் இல்லை. காரணம் ’கதி’ என்னும் சொல்லில் இகரம் இல்லை. இது ஓர் இலக்கிய மதிப்பீடா? அப்படியானால் தமிழுக்கு விதி? என்று கேட்டால் வில்லிப்புத்தூராரும் திருவள்ளுவரும் என்பார்களா?]
  2. “மேத்தா புதுக்கவிதையின் தாத்தா” என்று முன்பெல்லாம் பிதற்றிக் கொண்டிருந்தார்கள். பேராசிரியன்மார் கூட வகுப்பறைகளில் இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பேச்சுப் போட்டிகளில் கிள்ளைகள் இதை அப்படியே ஒப்பிக்கின்ற தொல்லைகள் உண்டு. [மு.மேத்தா ஒருவேளை பெண்ணாக இருந்திருந்தால் ‘புதுக்கவிதையின் ஆத்தா’ என்றிருப்பார்கள்.]

பாரதி சொன்ன பாணியில் நானும் ஃபார்சி மொழியின் மகாகவிகளுக்கு ஒரு தர வரிசை இட்டிருக்கிறேன்:

“யாமறிந்த கவிஞரிலே ரூமியைப் போல்

            அத்தார் போல் சனாயீ போல்

பூமிதனில் யாங்ஙனுமே பிறந்ததில்லை

            உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.”

ஹாஃபிழ் ஷீராஜி, இமாம் சஃ’தி, நிஜாமி என்று இந்தத் தர வரிசை தொடரும். உலகப் புகழ் பெற்ற உமர் கய்யாம் அதில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பார். இந்த வரிசையை உருவாக்க நான் நூறு நூற்களையாவது படித்திருக்கிறேன்.

குறிப்பிட்ட ஆளுமை ஒருவரைப் பற்றி அவரின் சாராம்சத்தையே ஒற்றை வரியில் காட்டுவது போல் மதிப்பீடு செய்து சூத்திரம் உரைப்பது அத்தனை எளிதல்ல. அந்த விதத்தில் என்னை வியக்க வைத்தவர் பி.டி.மெஹத்தா. இந்தியாவின் மாபெரும் ஆன்மிக ஆளுமைகள் இருவரைப் பற்றி அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அரவிந்தர் பற்றி அவர் சொன்னார்: “ஒரு வலிய இருப்பு” (A mighty existence). ரமண மகரிஷி பற்றி அவர் சொன்னார்: “ஒரு வலிய இருப்பின்மை” (A mighty non-existence).

தமிழில் இருபதாம் நூற்றாண்டில் பாரதியில் புதுமை காட்டிய மரபுக் கவிதை என்னவெல்லாம் ஆகி வந்தது என்பது பற்றி க.நா.சு உரைத்த மதிப்பீடு புருவம் உயர்த்த வைத்தது:

“பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை பாரதிதாசனில் வேகம் காட்டியது. தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதையில் எளிமை காட்டியது; ச.து.சு.யோகியாரின் கவிதையில் அலங்காரம் காட்டியது. நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கவிதையில் வசனமேயாகிவிட்டது என்று சொல்லலாம்.”

அதேபோல், சிறுகதை என்னும் இலக்கிய வகைமை தமிழில் எப்படிப் பரிணமித்து வந்தது என்பது பற்றி பிரபஞ்சன் மதிப்பிட்டு உரைக்கிறார் இப்படி: “பாரதி முயன்றார், ஐயர் எழுதினார், புதுமைப்பித்தன் சாதித்தார்.”

தமிழ்ப் புதுக்கவிதையில் மூவர் பற்றிய என் அவதானத்தை ரத்தினச் சுருக்கமாக நான் குறிப்பிடுவது உண்டு. மரபுக் கவிதையின் தொடை உத்திகள் மூன்று, அந்த மூவரிடம் ஆளுக்கு ஒன்றாகச் சிறப்படைந்துள்ளன. அதை நான் இப்படிச் சொல்வேன்: “முரணுக்கு அப்துல் ரகுமான்; மோனைக்கு வைரமுத்து; இயைபுக்கு வாலி.”

மூன்றுக்கும் சான்றுகள் காட்டட்டுமா?


அ) முரணுக்கு அப்துல் ரகுமான்:

1.      “புத்தகங்களே! சமர்த்தாய் இருங்கள். குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்!”

2.      “அவள் கண்ணைப் பார்க்கிறேன். வெள்ளை வானில் கறுப்பு நிலா.”

3.      ”சகுந்தலை நோக்கினாள். துஷ்யந்தனின் மனதில் மலர் தைத்தது.”

 ஆ) மோனைக்கு வைரமுத்து:

1. “நிலாத் தட்டு / நட்சத்திரச் சோறு / கைகழுவக் கடல் / கைதுடைக்க மேகம் / கனவின் விழிப்பில் / கக்கத்தில் நீ…. // மூங்கில் தோட்டம் / மூலிகை வாசம் / பிரம்பு நாற்காலி / பிரபஞ்ச ஞானம் / நிறைந்த மௌனம் / நீ பாடும் கீதம்.”

2. ”உன்னோடு நானிருந்த / ஒவ்வோர் மணித்துளியும் / மரணப் படுக்கையிலும் / மறக்காது கண்மணியே! / இன்று நினைத்தாலும் / இதயம் கனக்கிறதே /  அந்த நினைவுகளின் / அலைவந்து அடிக்கிறதே.”


இ) இயைபுக்கு வாலி:

1. ”வாலில்லை என்பதனால் வாலியாகக் கூடாதா?

     காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?”

2.”மாண்புமிகு மழையே! / உனக்கொரு மடல்! – நீ / எவ்வளவு பெய்தாலும் / ஏற்க வல்லது / கடல் கொண்ட குடல் / ஏற்க ஏலாதது / குடல் கொண்ட உடல்! / நீ பெய்யலாம் நூறு அங்குலம் / அன்னணம் நீ பெய்தால் / என்னணம் பிழைக்கும் எங்குலம்? / … / அளவோடு பெய்தால் உன் பேர் மழை / அளவின்றிப் பெய்தால் உன் பேர் பிழை /… / மழைக்கே தாகமா? / எமனுக்கு இன்னொரு பெயர் மேகமா?”

ஆளுமைகள் பற்றி ஆளுமைகளே அளந்து சொல்லும் மதிப்பீடுகள் இந்த வகையில் அமைவது உண்டு. கண்ணதாசனைப் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் செய்த மதிப்பீடு: “மீன் விற்கும் சந்தையில் விண்மீன்கள் விற்றவர்.” இந்த ஒற்றை வரி கண்ணதாசனை இரவெல்லாம் உறங்க விடவில்லையாம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றி க.பஞ்சாங்கம் ஒரு நூல் எழுதினார். கவிக்கோவின் ஆளுமையைக் காட்டும் சுடர்மிகு சூத்திரம் ஒன்றை அதன் தலைப்பிலேயே குறிப்பிட்டிருந்தார்: “கவிதைக் கனியால் உண்ணப் பட்டவர்.”

அடடா! எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்! இதை விளங்க வேண்டும் எனில் “பால்வீதி” என்னும் நூலில் மெழுகுவத்தி பற்றிக் கவிக்கோ எழுதிய இந்தக் கவிதை தெரிந்திருக்க வேண்டும்:

 தீப மரத்தின்

 தீக்கனி உண்ண

 விட்டில் வந்தது;

 கனியோ

 விட்டிலை உண்டது.

 

அர்த்தமற்ற சொற்கள் ஆயிரம் உரைப்பதை விட அர்த்தமுள்ள சில சொற்களால் பெரிய கருத்துக்களைப் பேசிவிடலாம். மனமே! வார்த்தை வலைகளுக்குள் சிக்காத அர்த்தங்களை நீ சிக்கனச் சொற்களால் சிக்கெனப் பிடி!

 

 

Wednesday, July 9, 2025

யா(தே) ஹுசைன் - 2

 


            கர்பலா களத்தில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மரணத்தைப் புன்முறுவலுடன் வரவேற்றார்கள். இறைவனின் விதிப்புக்குத் தன்னை ஒப்படைத்துக் கொள்வதில் அத்தனை தெளிவும் உறுதியும் இன்பமும் இறைத் தூதர்களுக்கும் இறை நேசர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகும். அவர்களின் உடல் பகைவரின் அம்புகளால் துளைக்கப் பட்டிருக்கலாம். ஆன்மாவோ மிக ஆனந்தத்துடன் அல்லாஹ்வின் சந்நிதிக்குச் சென்றுவிட்டது.

            (மறுமை நாளில் நல்லடியார்களிடம் சொல்லப்படும்)

            நிம்மதியடைந்த ஆத்மாவே!

            நீ உன் இறைவனிடம் மீளுவாயாக,

            அவன் திருப்தியுற்ற நிலையிலும்

            அவன் உன் மீது திருப்தியுற்ற நிலையிலும்.

            நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக

            என் சொர்க்கத்திலும் நுழைந்துவிடுவாயாக!

            (யா அய்யுஹன் நஃப்சுல் முத்ம’இன்னா,

             இர்ஜி’ஈ இலா றப்பிக்கி ராளியத்தம் மர்ளிய்யா

             ஃபத்ஃகுலீ ஃபீ இபாதீ, வத்ஃகுலீ ஜன்னத்தீ – 89:27-30)

            இந்தத் திருவசனத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் திகழ்கிறார்கள் என்று இறைநேசர்கள் உணர்ந்துள்ளனர். அந்த விளக்கத்தின் அடிப்படையில் முஹ்சின் நக்வி பாடுகிறார்:

            ’சாந்தியடைந்த ஆன்மாவே!’ என்று

            குர்’ஆன் எவரை அழைத்ததோ,

            இறைவனின் பார்வையில் அந்தப் படித்தரம்

            இமாம் ஹுசைனுக்கு உரியதாகும்!

            (குர்’ஆன் நே புகாரா ஜிசே நஃப்சே முத்ம’ஈன்

              ஃகாலிக் கீ நழர் மேன் ஹே யெ தரஜா ஹுசைன் கா)

            குர்’ஆன் என்னும் திருமறையை ஓதுவோர் பலர். ஆனால், குர்’ஆன் நபியை ஓதுகிறது, நபியின் குடும்பத்தாரை ஓதுகிறது. இந்த விளக்கங்கள் எத்தனை பேருக்கு எட்டுகிறது? முஹ்சின் நக்வி சொல்கிறார்:

            கடைவீதியின் கும்பலிடம் சொல்லுங்கள்

            வாய் மூடி மௌனமாய் இருப்பீராக;

            இதோ ஹுசைனை ஓதுகிறது குர்’ஆன்!

            (பஜார் கெ ஹுஜூம் செ கெஹ் தோ கெ ச்சுப் ரஹே

             குர்’ஆன் கர் ரஹா ஹே திலாவத் ஹுசைன் கீ)

            கர்பலா களத்தில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் தன் உயிரை நீத்து ஏகத்துவ உணர்வுக்கு உயிரூட்டினார்கள். கொடுங்கோல் ஆட்சி அதிகாரத்திற்கு அடிபணிவது என்பதும் ஒருவகையான சிலை வணக்கம்தான் என்று அவர்கள் கண்டார்கள். எனவே அதை எதிர்த்து நின்றார்கள். முஹ்சின் நக்வி சொல்கிறார்:

            வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை வராமல் போயிருக்கும்,

            சிலை வழிபாடு மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கும்,

            ஹுசைன் இப்னு அலீ தன் தலையைத் தந்திருக்காவிடில்

            இந்த உலகம் முழுவதும் யஜீதாக மாறியிருக்கும்.

            (ஜிந்தகீ ந உம்மீத் ஹோ ஜாத்தீ

             புத் பரஸ்த்தி ஜதீத் ஹோ ஜாத்தீ

              சர் ந தேத்தே ஹுசைன் இப்னே அலீ அகர்

              சாரி துன்யா யஜீத் ஹோ ஜாத்தீ)

            இன்றும் யஜீதுகள் இருக்கின்றனர். உலக ஆதாயத்துக்காக மார்க்கத்தை விற்கும் ஒவ்வொருவனும் ஒரு யஜீதுதான். அநீதம் புரியும் ஒவ்வொருவனும் ஒரு யஜீதுதான். அவர்களுக்கு எதிராக தலை நிமிர்ந்து நிற்கும் ஒவ்வொருவரும் ஒரு ஹுசைன்தான். முஹ்சின் நக்வி சொல்கிறார்:

            அசத்தியத்தின் முன் ஒருவர் சிரம் பணியவில்லை என்றால்,

            புரிந்துகொள், அவரது அறிவின் எஜமான் ஹுசைன் ஆவார்!

            (பாத்தில் கே சாம்னே ந ஜுகாயே ஜோ அப்னா சர்

             சம்ஜோ கே உஸ்கே ஸெஹன் கா மாலிக் ஹுசைன் ஹே)


            
கர்பலா மைதானத்தின் அருகில்தான் ஃபுராத் நதி ஓடிக் கொண்டிருந்தது. அந்தத் தண்ணீரில் ஒரு சொட்டுக் கூட ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்காமல் யஜீதின் படையினர் தடுத்துவிட்டனர். சுவனத் தடாகத்தின் இன்சுவைத் தண்ணீரை சொர்க்கவாசிகளுக்கெல்லாம் புகட்டுகின்ற நபியின் குடும்பத்தார் கர்பலாவில் கடும் தாகத்துடனேயே மடிய நேர்ந்தது. அப்போது அந்தத் தண்ணீரும் துடிதுடித்திருக்கும் என்று கற்பனை செய்கிறார் முஹ்சின் நக்வி:

            ஹுசைனின் நியாபகம் வந்தால்

            கண்கள் கலங்கி விடுகின்றன;

            ஓ! இப்போதும் ஹுசைனின் மீது

            நீருக்கு எவ்வளவு நேசம்!

            (திக்ரே ஹுசைன் ஆயா தோ ஆன்ஃகேன் ச்சலக் படீ

             பானீ கோ கித்னா பியார் ஹே அப் பீ ஹுசைன் சே)


            
இன்னொரு நுட்பமான நயமான கவிதை ஒன்றை நினைவு கூர்கிறேன். அதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் வரலாற்றைப் பற்றி அல்லாமா அலீமி ஷாஹ் ஆமிரி (தாமத் பரக்காத்துஹு) அவர்கள் ஆற்றிய பேருரை ஒன்றில் அதனை மேற்கோள் காட்டினார்கள். அது என் சிந்தையில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவ்வப்போது நினைத்துப் பார்த்து நெகிழும் வரியாகிவிட்டது. கவிஞர் சொல்கிறார்:

            மருதாணி இலையைப் பார்த்தால்

            எனக்கு நிம்மதியே வருவதில்லை;

            அதன் வெளிரங்கம் ஹசனின் நியாபகம்

            அதன் அந்தரங்கம் ஹுசைனின் நியாபகம்.

             (பர்கே ஹினா கோ தேக் கர் ஆத்தா நஹீன் ஹே ச்சைன்

              ழாஹிர் யாதே ஹசன் தொ பாத்தின் யாதே ஹுசைன்)



            இந்தக் கவிதையை விளங்கிக் கொள்வதற்கான குறிப்புகளைத் தருகிறேன். நபிகள் நாயகத்தின் பேரப் பிள்ளைகளான இமாம் ஹசன் (ரலி) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) இருவரும் பகைவர்களால் கொலை செய்யப்பட்டார்கள். இமாம் ஹசன் (ரலி) அவர்கள் உணவில் நஞ்சு வைத்துக் கொல்லப்பட்டார். இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலா களத்தில் அம்புகள், ஈட்டிகள், வாட்கள் ஆகிய கருவிகளால் தாக்கப்பட்டு ரத்தம் தோய்ந்த நிலையில் உயிர் நீத்தார். மருதாணி இலை பச்சை நிறமாக உள்ளது. அது நஞ்சின் நிறம். மருதாணியை அரைத்துப் பூசினால் சிவப்பு நிறம் தருகிறது. அது ரத்தத்தின் நிறம். இப்போது மீண்டும் கவிதையை வாசித்துப் பாருங்கள். கவிஞர் எத்தனை ஆழமான அவதானத்தோடு அதை எழுதியிருக்கிறார் என்பது புரியும்.

            இப்படி பல நூற்றாண்டுகளாக, பல்லாயிரம் கவிஞர்களின் பல்லாயிரம் சிந்தனைகளை இந்த தியாக வரலாறு மீட்டிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாமிற்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் கர்பலா வரலாறு ஏகத்துவத்தின் ஒளியைப் பாய்ச்சும் ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்கிறது. இறைஞான ரகசியங்கள் பலவற்றைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் இந்த வரலாற்றின் முக்கியத்துவம் பற்றி முத்தாய்ப்பாகச் சொல்ல வேண்டும் எனில் மவ்லானா முஹம்மத் அலீ ஜவ்ஹர் (ரஹ்) அவர்களின் வரிகளைத்தான் மேற்கோள் காட்ட வேண்டும்:

            ஹுசைனின் படுகொலை

            எதார்த்தத்தில்

            யஜீதின் மரணமே ஆகும்;

            இஸ்லாம் புத்துயிர் பெறுகிறது

            ஒவ்வொரு கர்பலாவுக்குப் பிறகும்!

            (கத்லே ஹுசைன் அஸ்ல் மேன் மர்கே யஜீத் ஹே

             இஸ்லாம் ஜிந்தா ஹோத்தா ஹே ஹர் கர்பலா கே பஅத்)